Type Here to Get Search Results !

கட்டுரை- கல்வித்தகைமை குறைந்தோரின் விரக்திக்கு தீர்வு காணும் திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்திற்கு அமைய வறுமை இல்லாத இலங்கையை கட்டியெழுப்பும் சிந்தனை பிரதான நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிலையானதும், முக்கியத்துவமானதுமான சிந்தனையாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை அளித்து, அவர்களுக்கு அரசாங்கத்தில் நிரந்தரமான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதில் அரசினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு சில தினங்களில் இந்த வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் குறித்து பலருக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. இதற்கான விண்ணப்பங்கள் அரசியல்வாதிகளின் வீடுகளில் வழங்கப்படுவதாகவும்,மறைவாக வழங்கப்பட்டு வருவதாகவும் வதந்திகள் உலவின. அரசினால் வெளியிடப்படுவதற்கு முன்னரே சில சமூகவலைத்தளங்கள் போலியான விண்ணப்பங்களை வெளியில் தயாரித்து விட்டதனால் இளைஞர்கள் குழப்பமடைந்தனர்.

எனினும் உத்தியோகபூர்வமாக அரச ஊடகங்களில் இந்த நியமனம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குப் பின்னர்தான் நாட்டிலுள்ள இளைஞர்,யுவதிகள் தெளிவு பெற்றனர்.'ஒரு இலட்சம் பேரில் நான் தெரிவு செய்யப்பட மாட்டேனா?' என்ற நம்பிக்கையுடன் பிரதேச செயலகங்களை நோக்கி இளைஞர்கள் படையெடுத்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாகவும் சில பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஜனசக்தி ஆசிரியர் நியமனங்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளுக்கான நியமனங்கள் அனைத்தும் அந்தக் காலங்களில் குறைந்த வருமானம் உடைய குடும்பத்தவர்களின் பிள்ளைகளுக்கே வழங்கப்பட்டிருந்தாலும் அந்நியமனங்களில் கல்வித் தகைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஆயினும் தற்போது வழங்கப்படவுள்ள நியமனமானது கல்வித் தகைமை குறைந்தவர்களுக்கான நியமனமாக ஒரு இலட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளதால் அது ரணசிங்க பி​ேரமதாசவின் திட்டத்தை விடவும் வரலாற்றில் பேசப்படும்படியாக உள்ளது. இலங்கையை ஆட்சி செய்த அண்மைய தலைவர்களில் கல்வித் தகைமை குறைந்தோருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்ைக எடுத்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.எதிர்காலத் தலைவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகும்.

பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அரைகுறையாக சித்தியடைந்தோர் மற்றும் வறுமை காரணமாகவும்,தான் வாழ்ந்த சூழல் அமைவிடத்தின் தாக்கம் காரணமாகவும் பாடசாலை வாழ்க்கையை திறன்பட முடிக்காமல் இடைநடுவில் கைவிட்டு வெளியேறியோர் பலர் உள்ளனர்.

அத்தகைய இளைஞர்களின் விரக்தி காரணமாகவே நாட்டில் போதைவஸ்துப் பாவனையும் அதிகரித்து இருக்கின்றன என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் தவறான வழியில் செல்கின்றனர் என்பதும் உண்மையாகும். இவ்வாறான இளைஞர்களையே சுயநலமிக்க அரசியல்வாதிகள் தங்களது அடியாட்களாக உருவாக்கி தேர்தல்காலங்களில் வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறான இளைஞர்களுக்கு தொழில் நியமனங்களை கொடுத்து வளப்படுத்துவதனூடாக நாட்டின் அபிவிருத்திப் பங்காளிகளாக இவர்களை மாற்ற முடியும் என்பது ஜனாதிபதியின் கொள்கையாகும்.


வறுமைக்குட்பட்ட குடும்பங்களைக் கண்டறிந்து அந்தக் குடும்பங்களிலுள்ள போதிய தகைமையற்றோருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதனால் சமூகவிரோத செயல்களை குறைத்து குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் இளவயதினரின் விரக்தியைப் போக்கவும் முடியும்.

இன்னொரு வகையில் பார்க்கப் போனால் "இவ்வாறான நியமனங்களை நாங்கள் உங்களுக்கு தருகின்றோம்" என கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி அந்த இளைஞர்களின் இலட்சக்கணக்கான ரூபா பணம் அரசியல்வாதிகளின் இணைப்பாளர்களாலும்,தொகுதி அமைப்பாளர்களாலும் சூறையாடப்பட்டு வந்துள்ளதை யாரால் மறுக்க முடியும்?

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளின் வாக்குமூலத்தை எடுத்து நோக்கினால் போதிய கல்வித் தகைமை குறைந்த சிற்றூழியர் நியமனத்தைக் குறி வைத்தே பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

எனவே இவ்வாறான நியமனங்களை முறைமைப்படுத்தி இளைஞர்களுக்கு வழங்குவதை உறுதி செய்து கொள்வதால் சுயநலமிக்க அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும். போதிய கல்வித் தகைமை இன்மையால் நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கருதும் இளைஞர்,யுவதிகள்தான் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழிலின் நிமித்தம் செல்கின்றனர்.இவ்வாறு பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல மறுக்கும் நி​ைலமை கண்டறியப்பட்டுள்ளது.தேவையற்ற குடும்ப சச்சரவுகள் தோன்றுகின்றன.எனவே இவ்வாறான இளைஞர்,யுவதிகளுக்கு சொந்த நாட்டிலேயே தொழிலை உருவாக்கிக் கொடுப்பதால் சமூக சீரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும் என்பது பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் முதன்மையான எண்ணக்கருவாகும்.


நேர்முகப் பரீட்சைகளுக்காக மாத்திரம் குணநலச் சான்றிதழை வழங்கிக் கொண்டிருந்த கிராமசேவகர்களுக்கு இப்போது தத்தமது பிரதேசத்திலுள்ள இளைஞர்.யுவதிகளின் உண்மையான குடும்ப நி​ைலவரத்தை உறுதிப்படுத்தி அரசுக்கு பொறுப்புக்கூறும் கடமை உள்ளது.

கல்வித்தகைமை உடையவர்களாலேயே நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற சிந்தனையை மாற்றியமைத்து வெளிநாடுகள் போல தகைமையற்றோருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கி அவர்களுக்கு உள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல் வெளிக்ெகாண்டுவரப்படவுள்ளது.

உண்மையான நாட்டின் தலைவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பங்களிலிருந்து எழுகின்ற தனிநபர் பிரச்சினைகளை தீர்ப்பவராக இருத்தல் வேண்டும். அவ்வாறான தலைவராகவே ஜனாதிபதி கோட்டாபயவை பார்க்க முடிகின்றது.


இந்நியமனங்களில் 15 வகையான பதவி நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.உதாரணமாக ஆயுதம் தாங்காத பாதுகாப்பு சேவைகள் என்ற பதம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இரவு நேரக் காவலாளிகள் இல்லாத அரச நிறுவனங்களுக்கு காவலாளிகளை நியமிக்க அரசு தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான மாகாண பாடசாலைகளுக்கு இரவு நேரக் காவலாளிகள் கிடையாது.அத்துடன் மாகாணத்திற்கு மாகாணம் சிற்றூழியர் வெற்றிடங்கள் முறையற்ற விதத்தில் நிரப்பப்படுவதால் நியமனத்தில் நியாயம் பேணப்படவில்லை.இப்போது வழங்கப்படவுள்ள இந்நியமனங்கள் கல்விசாரா ஊழியர் நியமனத்தில் முறைகேடுகளைக் களைய உதவுமென எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad